காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிர்ப்பு: சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் தலைமையில் நடந்தது


காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிர்ப்பு: சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 12 Sep 2019 11:15 PM GMT (Updated: 12 Sep 2019 7:31 PM GMT)

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில், திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ந.செல்லதுரை, வி.கோ.ஆதவன் உள்பட மாவட்ட செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

காஷ்மீரில் உள்ள கனிம மற்றும் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்பானி, அதானி கூட்டம் இனி ஜம்மு-காஷ்மீரில் கால் பதிக்கும். காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது ஜனநாயக படுகொலை. அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று மத்திய அரசு செயல்படுகிறது.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி போன்றவற்றை தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கவே வங்கிகள் இணைப்பு எனும் கொள்கையை கையில் எடுத்திருக்கிறது, மத்திய பா.ஜ.க. அரசு. நாட்டை இந்து ராஜ்ஜியமாக்குவது, ராமர் கோவில் கட்டுவது எனும் ஆர்.எஸ்.எஸ்.-சங்பரிவார் கொள்கைகளை பா.ஜ.க. அரசு செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

வங்கி இணைப்பு கொள்கை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மத்திய அரசு செய்திருக்கும் நன்றிக்கடன். பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது.

தொழில்துறை முடங்கியுள்ளது. ஆனால் நாடு வளர்ச்சி பாதைக்கு செல்வதாக மத்திய அரசு சப்பை கட்டு கட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story