பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது


பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 12 Sep 2019 9:30 PM GMT (Updated: 12 Sep 2019 7:33 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

சிறப்பு முகாம்

பொது வினியோக திட்டம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக பொது வினியோக திட்டத்தின் கீழ், மாதம்தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான (செப்டம்பர்) சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற குறைகள் முகாமிலேயே சரிசெய்து வழங்கப்படும். அதேபோல் ஸ்மார்ட் கார்டில் புகைப்படம் பதிவேற்றம் செய்து கொடுக்கப்படும்.

மேற்பார்வை அலுவலர்கள்

தூத்துக்குடி தாலுகாவிற்கு தூத்துக்குடி உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகாக்களுக்கு தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரும், திருச்செந்தூர் தாலுகாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், கோவில்பட்டி தாலுகாவிற்கு கோவில்பட்டி உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், விளாத்திகுளம் தாலுகாவிற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளரும், கயத்தாறு தாலுகாவிற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு குறைகள் இருப்பின் அதுகுறித்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story