தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் போலி ஆவணங்கள் கொடுத்து ஊக்கத்தொகை பெற்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்


தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் போலி ஆவணங்கள் கொடுத்து ஊக்கத்தொகை பெற்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்
x
தினத்தந்தி 12 Sep 2019 9:45 PM GMT (Updated: 12 Sep 2019 7:38 PM GMT)

தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் போலி ஆவணங்கள் கொடுத்து ஊக்கத்தொகை பெற்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் போலி ஆவணங்கள் கொடுத்து ஊக்கத்தொகை பெற்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சி.பி.ஐ.க்கு மாற்றம்

தூத்துக்குடியில் இயங்கி வரும் சில ஏற்றுமதி நிறுவனங்கள் போலி ஆவணங்கள் கொடுத்து அதற்காக சுங்கத்துறை மூலம் ஏற்றுமதி சிறப்பு ஊக்கத்தொகை பெற்றதாக வந்த தகவலின் பேரில் சுங்கத்துறை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தணிக்கை நடத்தினர். இதில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நடந்த ஊக்கத்தொகை தணிக்கையில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் போலி ஏற்றுமதி ஆவணங்களை சமர்ப்பித்து சுமார் ரூ.13 கோடி வரை ஊக்கத்தொகை பெற்றதாக சுங்கத்துறை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனையடுத்து மதுரையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், தூத்துக்குடி உள்ள பிரபல 10 ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் சிலர் மீது ரூ.2 கோடியே 8 லட்சத்து 45 ஆயிரத்து 841 மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

முறைகேடு

இதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றுமதி செய்ததாக 209 ரசீதுகள் போலியாக போடப்பட்டு அரசின் ஊக்கத்தொகை ரூ.10 கோடியே 36 லட்சத்து 865 முறைகேடாக பெற்று இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் மதுரை சி.பி.ஐ. அதிகாரிகள், 5 ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் 4 ஏற்றுமதி இறக்குமதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story