விவசாய இலவச மின் இணைப்பில்: மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தை - முற்றுகையிட்ட விவசாயிகள்


விவசாய இலவச மின் இணைப்பில்: மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தை - முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 12 Sep 2019 9:53 PM GMT (Updated: 12 Sep 2019 9:53 PM GMT)

விவசாய இலவச மின் இணைப்பில் மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து அவினாசி மின்சார வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

அவினாசி,

அவினாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சி பகுதியில் விவசாயிகளின் தோட்டத்தில் இலவச மின் இணைப்பில் மீட்டர் பொருத்த வந்த மின் வாரிய அலுவலர்களிடம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.இந்த நிலையில் மின் இணைப்பு உள்ள விவசாய கிணறுகளில் மின் இணைப்பில் மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் அவினாசி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதன்பின்னர் மின்வாரிய அதிகாரி பாலனிடம் கோரிக்கைமனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி கூறும்போது “ வடுக பாளையத்தில் விவசாயிகள் தோட்டத்தில் இலவச மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்த வந்த தகவல் எனக்கு தெரியவில்லை.

இது குறித்து விசாரனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் நாட்களில் மின் மீட்டர் பொருத்த மாட்டோம்” என்றார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் கூறியதாவது “

அவினாசி ஒன்றியம் முழுவதும் விவசாயிகள் தோட்டத்தில் இலவச மின் இணைப்பில்மின் மீட்டர் பொருத்த கூடாது, பல பேர் உயிர் தியாகம் செய்து இலவச மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. எழுத்து வடிவில் மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்த மாட்டோம் என்று எழுதித்தர கேட்டுள்ளோம்.” என்றார்.

இதில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்து ரத்தினம், ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், கருப்புசாமி, வெள்ளிங்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story