வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு:கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை போலீசாருடன் வாக்குவாதம்-பரபரப்பு


வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு:கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை போலீசாருடன் வாக்குவாதம்-பரபரப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 10:41 PM GMT (Updated: 12 Sep 2019 10:41 PM GMT)

நகருக்கு வெளியில் குடிசைமாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை முத்தண்ணன்குளம் உள்ளிட்ட குளக்கரை பகுதிகளில் வசிப்பவர்களை அகற்றிவிட்டு, அவர்களுக்கு குடிசைமாற்று வாரியம் சார்பில் வேறுஇடங்களில் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. புறநகர் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதற்கு கோவை குளக்கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தாங்கள் அந்த பகுதியில் நீண்டநாளாக வசித்து வருவதாகவும், குழந்தைகளின் படிப்பு மற்றும் தொழில் நகருக்குள் இருப்பதால் நகருக்குள்ளேயே வீடுகட்டி பட்டா வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு திரளான பெண்கள் நேற்று திரண்டு வந்தனர். அவர்களை அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வாசலில் முற்றுகையிட்டனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது. தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து யாரும் உள்ளே செல்ல முடியாதவகையில் கலெக்டர் அலுவலக கேட்டையும் போலீசார் பூட்டினார்கள். இதனால் அரசு அலுவலக பணி விஷயமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்பவர்களும், உள்ளே இருந்து வெளியே வருபவர்களும் சிரமப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசிகலையரசன் மற்றும் பிரதிநிதிகள் கலெக்டரை சந்திக்க சென்றனர். கலெக்டர் இல்லாததால் அவருடைய நேர்முக உதவியாளரிடம் மனுஅளித்தனர்.

கோவை நகருக்குள் தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டியது இருப்பதால், நகருக்குள் நிலம் ஒதுக்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும். நகரின் வெளிப்பகுதிக்கு இடமாற்றம்செய்யும் முடிவை கைவிட வேண்டு்ம் என்று அந்த மனுவில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

இதன்பின்னர் போராட்டம் நடத்திய பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story