கோவையில் தங்கி இருந்த: வடமாநில வாலிபரின் அறையில் இருந்து 2 கைத்துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்


கோவையில் தங்கி இருந்த: வடமாநில வாலிபரின் அறையில் இருந்து 2 கைத்துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:46 PM GMT (Updated: 12 Sep 2019 10:46 PM GMT)

கோவையில் தங்கி இருந்த வடமாநில வாலிபரின் அறையில் இருந்து 2 கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பவன்சிங் (வயது 31). இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். அவருடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரை கடையின் உரிமையாளர் வேலையை விட்டு நீக்கிவிட்டார். இதனால் தனது சொந்த ஊருக்கு சென்ற பவன்சிங் கடந்த சிலநாட்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் அவர் சுக்ரவார்பேட்டையில் அறை எடுத்து தங்கி இருந்தார். அந்த அறையில் அவருடன் 5 பேர் தங்கி இருந்தனர்.

இதற்கிடையே, பவன்சிங் தான் வேலை செய்து வந்த கடைக்கு சென்று மீண்டும் வேலை கேட்டார்.

ஆனால் கடையின் உரிமையாளர் அவரை திட்டி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ராஜஸ்தான் சென்ற பவன்சிங், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவை வந்து ஏற்கனவே தங்கி இருந்த அறையில் தனது பையை வைத்தார். அப்போது அந்த பைக்குள் இருந்து ஏதோ வித்தியாசமான சத்தம் வந்தது. இதுதொடர்பாக அறையில் இருந்தவர்கள் அவரிடம் கேட்டபோது சரியாக பதில் சொல்லவில்லை.

அவர் வெளியே சென்றதும், அறையில் இருந்தவர்கள் பவன்சிங் பையை திறந்து பார்த்தனர்.

அதற்குள் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பவன்சிங் பையில் இருந்த 30 செ.மீ. நீளமுள்ள கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த சம்பவம் பற்றி உயர் அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் ஏதும் தெரிவிக்கப்பட வில்லை. இதற்கிடையே, வடமாநில வாலிபரிடம் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்தது குறித்து போலீஸ் கமிஷனர் சுமித் சரணுக்கு தெரியவந்தது.

உடனே அவர் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று காலையில் பவன்சிங் தங்கி இருந்த அறையில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் வைத்திருந்த மற்றொரு பையில் சோதனை செய்தனர்.

அதற்குள் 16 செ.மீ. நீளமுள்ள மற்றொரு கைத்துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்கள் இருந்தன. உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அந்த அறையில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் பவன்சிங் தலைமறைவாகி விட்டார்.

நேற்று முன்தினம் மாலையில் அறையில் இருந்து வெளியே சென்ற பவன்சிங் மீண்டும் அறைக்கு வர வில்லை என்று அவருடன் தங்கி இருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வெரைட்டிஹால்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் பவன்சிங்கிற்கு எப்படி கைத்துப்பாக்கிகள் கிடைத்தன, அவற்றை எதற்காக கோவைக்கு கொண்டு வந்தார் என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவை வந்த பவன்சிங், தான் ஏற்கனவே வேலை செய்த கடைக்கு சென்று வேலை கேட்டுள்ளார். அதற்கு அந்த கடையின் உரிமையாளர் வேலை தர மறுத்துள்ளார். இதனால் மீண்டும் ராஜஸ்தான் சென்று விட்டு கைத்துப்பாக்கிகளுடன் கோவைக்கு வந்து உள்ளார்.

கடையின் உரிமையாளர் அவமானப்படுத்தியதால், அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்து இருக்க வாய்ப்பு உள்ளது. கைப்பற்றப்பட்டவை இரண்டும் நாட்டுத்துப்பாக்கிகள்தான். இதை ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகம் பயன்படுத்துவது உண்டு. அதை அவர் எப்படி கோவைக்கு கொண்டு வந்தார் என்பதுதான் தெரியவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைமறைவாக இருக்கும் பவன்சிங்கை பிடித்தால்தான் அவருக்கு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள்எப்படி கிடைத்தது என்பது தெரியவரும். எனவே அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்ததால் துப்பாக்கிகள் ஏந்திய கமாண்டோ போலீசார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடமாநில வாலிபர் தங்கி இருந்த அறையில் இருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story