திருத்துறைப்பூண்டி அருகே, சரக்கு வேன் மோதி இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் மகன் பலி - போலீசார் விசாரணை


திருத்துறைப்பூண்டி அருகே, சரக்கு வேன் மோதி இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் மகன் பலி - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Sep 2019 10:30 PM GMT (Updated: 12 Sep 2019 11:15 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே சரக்கு வேன் மோதி இந்திய கம்யூனிஸ்டு பிரமுகரின் மகன் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நேதாஜி. இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருடைய மகன் பகத்சிங் (வயது30). டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு கட்டிமேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கட்டிமேடு தேவர்பண்ணை என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பகத்சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் சரக்கு வேன் டிரைவர் திருத்துறைப்பூண்டி வ.உ.சி. நகரை சேர்ந்த அரவிந்தன் காயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பகத்சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், அரவிந்தனை சிகிச்சைக்காகவும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story