குவைத் நாட்டில் இறந்த மகனின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் தாய் மனு


குவைத் நாட்டில் இறந்த மகனின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் தாய் மனு
x
தினத்தந்தி 12 Sep 2019 10:15 PM GMT (Updated: 12 Sep 2019 11:15 PM GMT)

குவைத் நாட்டில் இறந்த மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

ராமநாதபுரம்,

பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர்களின் மகன் மணிகண்டன் (42). திருமணமாகாத இவர் பல ஆண்டுகளாக குவைத் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். மாதா மாதம் ஊதியத்தை தனது தாய்க்கு அனுப்பி வந்த அவர் கடந்த 8-ந் தேதி காலையில் கடைசியாக பேசியுள்ளார். இந்த நிலையில் அன்று இரவு திடீரென்று மணிகண்டன் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது தாய் சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரியும், தனது மகனின் இறப்பிற்கான உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யக் கோரியும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு கொடுத்தார். காலையில் நன்றாக பேசிய மகன் இரவில் எவ்வாறு திடீரென்று இறந்தான் என்பது மர்மமாக உள்ளது. அதன் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.

சரஸ்வதிக்கு 3 ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உண்டு. மூத்த மகன் சுரேஷ் 22 வயதில் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டாராம். சரஸ்வதியின் கணவர் சோனைமுத்து வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரும் இறந்து விட்டாராம். பெரும் போராட்டத்திற்கு பின்னர் 6 மாதம் கழித்து உடலை கொண்டு வந்துள்ளனர்.

மேலும், ஒரே மகள் பாக்கியலெட்சுமியை திருமணம் செய்து கொடுத்த நிலையில் 23 வயதில் அவரும் 2 வயது மகனை கொடுத்துவிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதனால் இறந்து போன மூத்த மகனின் மகளையும், மகளுக்கு பிறந்த மகனையும் சரஸ்வதிதான் வளர்த்து வருகிறார்.

இதுபோன்ற குடும்ப சூழ்நிலையில்தான், திருமணம் செய்யாமலேயே குடும்பத்தை காப்பாற்றி வந்த மணிகண்டனும் இறந்துவிட்டதால் சரஸ்வதியை சோகத்தின் மேல் சோகம் சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்று ஒரே மகனான சரவணனை மட்டுமே நம்பி உள்ளதாக சரஸ்வதி கண்ணீர் மல்க தெரிவித்தது வேதனை அளிப்பதாக இருந்தது.

Next Story