ஓணம் பண்டிகை விற்பனை மந்தம்: தோவாளை மார்க்கெட்டில்தேக்கமடைந்த பூக்கள் குப்பையில் கொட்டி அழிப்பு


ஓணம் பண்டிகை விற்பனை மந்தம்: தோவாளை மார்க்கெட்டில்தேக்கமடைந்த பூக்கள் குப்பையில் கொட்டி அழிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 10:30 PM GMT (Updated: 12 Sep 2019 11:15 PM GMT)

தோவாளை பூ மார்க்கெட்டில் ஓணம் பண்டிகை விற்பனை மந்தமானதால், தேக்கமடைந்த பூக்கள் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி இரவு முழுவதும் விடிய விடிய விற்பனை நடைபெறுவது வழக்கம். அப்போது கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்வார்கள்.

அதன்படி, தோவாளை பூ மார்க்கெட்டில் கடந்த 9-ந் தேதி இரவு விடிய விடிய வியாபாரம் நடந்தது. இதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான பூக்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறவில்லை. சுமார் 300 டன் பூக்கள் வந்து குவிந்த நிலையில், 200 டன்தான் விற்பனையானது. 100 டன் பூக்கள் தேக்கம் அடைந்ததாக வியாபாரிகள் கூறினர். தேக்கமடைந்த பூக்கள் மார்க்கெட்டில் பெட்டிகளில் அப்படியே வைக்கப்பட்டிருந்தன. இதனால், வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரி மதுகிருஷ்ணன் கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி பூ விற்பனை அதிக அளவில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு விற்பனையில் மந்தம் ஏற்பட்டது. இதனால் சுமார் 100 டன் பூக்கள் தேக்கமடைந்தது.

வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 20 லாரி பூக்களை இறக்காமல் அப்படியே திருப்பி எடுத்து சென்று விட்டனர். அவற்றை அவர்கள் செல்லும் வழியிலேயே கொட்டி அழித்து விடுவார்கள். இங்கு தேங்கிய பூக்கள் செக்கர்கிரி மலை அடிவாரத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

லாரியில் திருப்பி அனுப்பப்பட்ட பூக்கள் தோவாளை நாற்கர சாலை விவசாய நிலத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.

Next Story