எலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு


எலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Sep 2019 11:15 PM GMT (Updated: 12 Sep 2019 11:17 PM GMT)

எலச்சிபாளையம் மற்றும் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆசியா மரியம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை கலெக்டர் ஆசியா மரியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சித்த மருத்துவ பிரிவு, மருந்து வழங்கும் பகுதி, புறநோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதி, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்யும் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை வழங்குவது குறித்து விசாரித்தார். மருந்துகளின் இருப்பினையும், இருப்பு பதிவேட்டினையும் பார்வையிட்டு, தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பு உள்ளதா? என்று டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்வதை பார்வையிட்ட கலெக்டர், கர்ப்பிணிகளிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளபடி சத்தான உணவு பழக்கங்களை மேற்கொள்ளுமாறும், தகுந்த இடைவெளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். மேலும் ஆண், பெண் பாலின விகிதம் சமமாக இருக்க பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை கண்காணிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கலந்துரையாடி அறிவுறுத்தினார்.

கர்ப்பிணிகளின் விவரங்களை சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்து கர்ப்பிணிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் காய்ச்சலுடன் நோயாளிகள் வந்தால் உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்து ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Next Story