முகவர்கள்-மொத்த விற்பனையாளர்கள் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் ராமன் எச்சரிக்கை


முகவர்கள்-மொத்த விற்பனையாளர்கள் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் ராமன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Sep 2019 11:15 PM GMT (Updated: 12 Sep 2019 11:17 PM GMT)

முகவர்கள்-மொத்த விற்பனையாளர்கள் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்,

இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவிப்பின் படி அனைத்து வகையான ஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது ஓர் கூட்டுறவு நிறுவனமாகும். பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் தரமான பாலை ஆவின் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி அனைத்து வகையான ஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி கீழ்கண்டவாறு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 19-ந் தேதி முதல் உயர்த்தப்பட்ட விலை நிலைப்படுத்திய பாலுக்கு 250 மி.லிக்கு ரூ.12, 500 மி.லி ரூ.23.50, முழு கொழுப்பு செறிந்த பாலுக்கு 500 மி.லி ரூ.26, ஒரு லிட்டர் ரூ.51 ஆகும்.

பால் விலை உயர்வினை பயன்படுத்தி ஒரு சில ஆவின் பால் விற்பனை முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பாலை கூடுதல் விலைக்கு மளிகை கடைகளுக்கும் விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்ட வண்ணம் உள்ளது.

எனவே இவ்வாறு பொதுமக்களுக்கு சரியான விலையில் ஆவின் பாலை விற்காமல், கூடுதல் விலைக்கு விற்கும் முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உரிமம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும். இதற்காக சட்டப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் கூடுதல் விலை கொடுக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story