காதலனுடன் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து மிரட்டல் : கல்லூரி பெண் ஊழியர் தற்கொலை முயற்சி- 2 பேரிடம் போலீசார் விசாரணை


காதலனுடன் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து மிரட்டல் : கல்லூரி பெண் ஊழியர் தற்கொலை முயற்சி- 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Sep 2019 10:30 PM GMT (Updated: 12 Sep 2019 11:17 PM GMT)

ஆத்தூரில் காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது படம் பிடித்ததை வைத்து கல்லூரி பெண் ஊழியரை ஆசைக்கு இணங்கும்படி மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக காதலன் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண் டி.பார்ம் படித்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். அந்த பெண் குடியிருக்கும் பகுதிக்கு பக்கத்து தெருவில் சேலத்தில் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கல்லூரி பெண் ஊழியருக்கும், இன்சூரன்ஸ் நிறுவன பணியாளருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் கல்லூரி விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். வாரம் ஒருமுறை ஊருக்கு வந்து விட்டு செல்வார். அப்போது அந்த பெண் ஊழியரும், இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அந்த இன்சூரன்ஸ் ஊழியர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த படத்தை நெல் கதிர் அடிக்கும் எந்திரத்தின் டிரைவராக வேலைபார்க்கும் தனது நண்பரிடம் காண்பித்து உள்ளார். பின்னர் அந்த படங்களை அவருடைய செல்போனுக்கும் அனுப்பினார்.

இதன்பின்னர் பெண் ஊழியருக்கு அந்த டிரைவர் வாட்ஸ்-அப் மூலம் அந்த படங்களை அனுப்பியுள்ளார். பின்னர் தனது ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லையென்றால் வீடியோ, போட்டோ அனைத்தையும் முகநூல், வாட்ஸ்-அப் மூலம் பரப்பி விடுவேன், என டிரைவர் மிரட்டியுள்ளார். இதேபோல் டிரைவர் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் அந்த பெண் ஊழியருக்கு போன் செய்து மிரட்டி வந்துள்ளனர்.

இதுபற்றி கல்லூரி பெண் ஊழியர் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து தந்தையும், மகளும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று புகார் தெரிவித்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஆத்தூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த பெண்ணின் காதலன், டிரைவர் ஆகிய 2 பேரையும் ஆத்தூர் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் தொடர்புடைய மற்ற 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அந்த பெண் ஊழியர் வீட்டில் இருந்தபோது தூக்க மாத்திரை மற்றும் பிற மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த பெண்ணை சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story