சூளகிரி அருகே குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


சூளகிரி அருகே குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 7:45 PM GMT)

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள குடிசாதனபள்ளி கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரும் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. குடிநீருக்காக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.

இந்தநிலையில குடிசாதனபள்ளி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தன். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து சூளகிரி வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story