விபத்து வழக்கை விரைந்து நடத்தி ந‌‌ஷ்டஈடு பெற்று தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த வாலிபரால் பரபரப்பு


விபத்து வழக்கை விரைந்து நடத்தி ந‌‌ஷ்டஈடு பெற்று தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 7:47 PM GMT)

விபத்து வழக்கை விரைந்து நடத்தி, ந‌‌ஷ்டஈடு பெற்று தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டம், ரஞ்சன்குடி காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அருள்செல்வம்(வயது 27) என்பதும், அவருடன் வந்திருந்தவர்கள் அவரது மனைவி கவிதா மற்றும் அபிநயா, அக்‌‌ஷயா ஆகிய 2 பெண் குழந்தைகள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அருள்செல்வம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கீழப்புலியூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வாலிகண்டபுரம் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் அருள்செல்வம் மீது, அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் மோதி விட்டதாம். இதில் படுகாயமடைந்த அவர் இது தொடர்பாக மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த புகார் தொடர்பாக பெரம்பலூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்றதில் இருந்து வேலைக்கு ஏதும் அருள்செல்வம் செல்லமுடியாததால் குடும்பத்தினரை கவனிக்க முடியவில்லையாம். இதனால் இந்த வழக்கை விரைந்து விசாரித்து, ந‌‌ஷ்டஈடு பெற்று தரக்கோரி பெரம்பலூர் சமரச தீர்வு மையத்தில் அணுகியுள்ளார். ஆனால் அவார்கள் சரியான விசாரணை இல்லையென்று கூறி விட்டனர் எனேவே வழக்கின் விசாரணையை கோர்ட்டு விரைந்து நடத்தி ந‌‌ஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அருள்செல்வம் பெட்ரோல் கேனுடன் வந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரை கலெக்டர் அலுவலகத்திலும், கோர்ட்டிலும் இது தொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க செல்லுமாறு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Next Story