கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 13 Sep 2019 11:30 PM GMT (Updated: 13 Sep 2019 7:50 PM GMT)

ஆத்தூர் அருகே கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆத்தூர்,

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் டி.பார்ம் படித்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் சேலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் குடியிருந்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் தனது நண்பரான டிரைவர் ஒருவருக்கு அனுப்பினார். அந்த படத்தை வைத்து டிரைவர் அந்த கல்லூரி பெண் ஊழியரை தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளார்.

இதுபற்றி அந்த கல்லூரி பெண் ஊழியர், தனது தந்தையுடன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சென்று புகார் தெரிவித்தார். அந்த கல்லூரி பெண் ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரையும், அந்த டிரைவரையும் ஆத்தூர் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த டிரைவரின் செல்போனை வாங்கி போலீசார் விசாரித்தனர். அந்த செல்போனில் மேலும் பல இளம்பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது தெரியவந்தது.

பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் இருப்பது, உல்லாசமாக இருப்பது, குளிப்பது போன்ற படங்கள் அதில் இருந்தது தெரியவந்தது. அந்த பெண்கள் யார்? அந்த படங்களை எடுத்தது யார்? படங்களை எப்படி எடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதற்கு பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள். இதனால் அந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் விசாரணையில் செல்போனில் நிர்வாண படங்கள் இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளதால், பொள்ளாச்சி சம்பவம் போன்று ஆத்தூரில் நடைபெற்று இருக்குமோ? என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Next Story