தாளவாடியில் டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலி


தாளவாடியில் டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 13 Sep 2019 11:00 PM GMT (Updated: 13 Sep 2019 7:51 PM GMT)

தாளவாடியில் டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலியானான்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சுஜாதா. இவர்களுடைய மகன் சரண் (வயது 7).

இவன் தொட்டகாஜனூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் சரணுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவனை தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர் அங்கிருந்து அவன் மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். அப்போது அவனுடைய ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருந்தது. இதனால் அவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சரணுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தான்.

சரணின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ’தாளவாடியில் முறையாக கொசு மருந்து உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் சாக்கடை சரியாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி ஆகி நோய் பரவுகிறது. அதனால் தான் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியாகியுள்ளான். எனவே டெங்கு பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story