புதியதாக கல்குவாரி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


புதியதாக கல்குவாரி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 7:56 PM GMT)

உத்திரமேரூர் அருகே புதியதாக அமைக்கப்பட்ட கல்குவாரியை உடனடியாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் அடுத்த அரும்பிலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழவேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட கிரஷர்களும், 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளும் செயல்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதி நிலங்களில் உள்ள பாறைகள் மற்றும் கருங்கற்களை வெடி வைத்து தகர்ப்பதால் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் கற்கள் மற்றும் கற்பொடிகள் சிதறுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுவது மட்டுமல்லாமல், அங்கு ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும் அச்சமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், மலைப்பள்ளங்களில் சக்திவாய்ந்த வெடிகளை வெடிக்கச் செய்வதன் காரணமாக அருகில் உள்ள சீத்தாவரன், அருன்குன்றம், அரும்பியூர், பினாயூர், சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதிபொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனுக்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றி கொண்டு வேகமாக வரும் லாரிகள் விபத்தை ஏற்படுத்துவதால், 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவியர்கள் விபத்துக்குள்ளாகி இறந்துள்ளனர். இந்தநிலையில் பழவேரி கிராமம் அருகே சுமார் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மூதாதையர்கள் நினைவுச்சின்னமான முதுமக்கள் தாழிகள் நிறைந்த மலைப்பகுதி உள்ளது. இதன் அருகே புதியதாக கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக பழங்கால நினைவுச்சின்னங்கள் அழிந்து வருவதாக கூறி அந்த கிராம மக்கள் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்து கல்குவாரியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த சாலவாக்கம் போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் கல்குவாரியை மூட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story