திருச்சி அருகே, தண்டவாளத்தில் திடீர் விரிசல் - பாலக்காடு ரெயில்கள் தப்பின


திருச்சி அருகே, தண்டவாளத்தில் திடீர் விரிசல் - பாலக்காடு ரெயில்கள் தப்பின
x
தினத்தந்தி 13 Sep 2019 10:00 PM GMT (Updated: 13 Sep 2019 8:21 PM GMT)

திருச்சி அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் பாலக்காடு ரெயில்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பின.

ஜீயபுரம், 

திருச்சி அருகே ஜீயபுரம் அடுத்துள்ள கடியாக்குறிச்சி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், அருகில் உள்ள கடியாக்குறிச்சி ரெயில்வே கேட் கீப்பருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்த போது, சுமார் ஒரு அங்குலம் அளவுக்கு தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு நகர்ந்து இருந்தது. உடனே அவர் முத்தரசநல்லூர் ரெயில் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்.

அந்த நேரத்தில் திருச்சி-பாலக்காடு ரெயிலும், பாலக்காடு-திருச்சி ரெயிலும் அந்த பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. இதனால் ரெயில் நிலைய அதிகாரிகள் 2 ரெயில்களின் என்ஜின் டிரைவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். உடனே பாலக்காட்டில் இருந்து வந்த ரெயில் எலமானூர் அருகே நிறுத்தப்பட்டது. மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து வந்த ரெயில் முத்தரசநல்லூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் திருச்சி- பாலக்காடு ரெயில்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பின.

இதைத்தொடர்ந்து ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில்கள் தற்காலிகமாக அந்த பகுதியை கடந்து செல்லும் வகையில் தண்டவாள விரிசலை சரிசெய்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த பகுதியை 2 ரெயில்களும் மிகவும் மெதுவாக கடந்து சென்றன.

அந்த ரெயில்களை தொடர்ந்து வந்த ரெயில்களும் அந்த பகுதியில் மிகவும் மெதுவாகவே இயக்கப்பட்டன. பின்னர் நேற்று பகலில் விரிசல் விழுந்த தண்டவாளம் வெட்டி அகற்றப்பட்டு, புதிய தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெற்றது.

Next Story