ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உள்பட 3 மந்திரிகளின் பதவியை பறிக்க முடியாது மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு


ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உள்பட 3 மந்திரிகளின் பதவியை பறிக்க முடியாது மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Sep 2019 11:30 PM GMT (Updated: 13 Sep 2019 9:44 PM GMT)

மராட்டியத்தில் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உள்பட 3 மந்திரிகளின் பதவியை பறிக்க முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

மராட்டியத்தில் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உள்பட 3 மந்திரிகளின் பதவியை பறிக்க முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மந்திரி பதவி

மராட்டிய சட்டசபை தேர்தலை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆளும் கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இந்த வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த, மூத்த காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்தார்.

இதேபோல தேசியவாத காங்கிரசில் இருந்து ஜெய்தத் சிர்சாகர் சிவசேனாவுக்கு தாவினார். இவர்களுக்கு சமீபத்தில் மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதேபோல மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் அவினாஸ் மகாதேஷ்கருக்கும் மந்திரி பதவி வழங்கப்பட்டது.

வழக்கு

எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாகவோ அல்லாத மேற்கண்ட 3 பேருக்கும் அரசியல் ஆதாயத்துக்காக மந்திரி பதவி வழங்கப்பட்டு இருப்பதால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மும்பையை சேர்ந்த வக்கீல் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் தர்மாதிகாரி, ஜி.எஸ். பட்டேல் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதில் மந்திரிகள் 3 பேரின் பதவியை பறிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். இது தொடர்பாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

அரசியல் ஆதாயம் என்ற ஒரே நோக்கத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதை நாங்கள் ஆமோதிக்கவில்லை. மேலும் இது தார்மீக ரீதியில் சரியானது அல்ல. அது ஒரு அரசியல் திட்டமாக இருக்கலாம்.

இந்த பிரச்சினையில் மந்திரிகள் குறைபாடுகள் உள்ளவர்கள் என்றும், அவர்களை தகுதி நீக்கம் செய்வதையும் இந்த கோர்ட்டால் செய்ய முடியாது. இந்த பிரச்சினையில் மக்கள் தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

அரசியலில் இதுபோன்ற போக்கு துரதிருஷ்டவசமானது. இதை மக்களிடம் விட்டு விடுவது தான் சிறந்தது. வாக்காளர்களாகிய அவர்கள் இதுபோன்ற அரசியல் போக்கிற்கு பதிலளிக்க வேண்டும். மக்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டுள்ளனர். அவர்கள் முடிவு எடுக்க தகுதியானவர்கள்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Next Story