புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:00 PM GMT (Updated: 13 Sep 2019 10:19 PM GMT)

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திருப்பூர், பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்,

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சீனிவாசன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில சிறப்பு உறுப்பினர் திருநாவுகரசு ஆகியோர் கோரிக்கைளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மாணவர், ஆசிரியர், சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக்கொள்கை 2019- ஐ முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், தொடக்க கல்வியை அழித்தொழிக்கும் அரசாணை 145 திரும்ப பெற வேண்டும், போலீசாரால் புனையப்பட்டுள்ள குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளை இணைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் அண்ணாசிலை முன்பிருந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்றனர். அங்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பல்லடம் தாலுகா தலைவர் கண்ணன்,பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொங்கலூர் வட்டார செயலாளர் வெற்றிவேல், பொங்கலூர் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் கனகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். முடிவில் பல்லடம் வட்ட கிளை தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

Next Story