அவினாசி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


அவினாசி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2019 10:15 PM GMT (Updated: 14 Sep 2019 4:43 PM GMT)

அவினாசி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவினாசி,

அவினாசி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். இந்த மாணவி தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்வார். பின்னர் வகுப்புகள் முடிந்ததும் மாலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து செல்வார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அந்த மாணவி வழக்கம்போல் வீ்ட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார். பின்னர் பள்ளி வகுப்புகள் முடிந்த பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது மாணவியை அவினாசியை அடுத்த ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளியான கோவிந்தசாமி (வயது 23) என்பவர் அழைத்து சென்றதும், அவர் மாணவியை கொட்டாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீ்ட்டில் தங்க வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதனால் பதறித்துடித்த பெற்றோர் கொட்டாம்பாளையம் சென்று, அங்கு கோவிந்தசாமியின் உறவினர் வீ்ட்டில் இருந்த மாணவியை மீட்டு வந்தனர். அப்போது அங்கு வீட்டில் இருந்த மாணவியை கோவிந்தசாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் அவினாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி விசாரித்து, கோவிந்தசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story