5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம்


5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:45 PM GMT (Updated: 14 Sep 2019 7:40 PM GMT)

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஜங்‌‌ஷன் பகுதியில் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நம்பிராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுசெயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொய் வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். ஒருங்கிணைப்பாளர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

உண்ணாவிரத போராட்டம்

இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் உள்பட அனைத்து ஆசிரியர், பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி நடத்த உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியினர் திரளாக பங்கேற்பது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பும், கண்டனத்தையும் தெரிவித்தும், இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை, மாநில பொருளாளர் சந்திரசேகர், துணை பொது செயலாளர் முனியாண்டி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி எட்வர்ட் ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story