கொடைக்கானலில் 107 வயதிலும் இளைஞர் போல் சுறுசுறுப்பாக செயல்படும் முதியவர்


கொடைக்கானலில் 107 வயதிலும் இளைஞர் போல் சுறுசுறுப்பாக செயல்படும் முதியவர்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:45 PM GMT (Updated: 14 Sep 2019 8:26 PM GMT)

கொடைக்கானலில் 107 வயதிலும் இளைஞர்போல் முதியவர் ஒருவர் சுறுசுறுப்பாக செயல்படுவதை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 107). இவர், கடந்த 1912-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி பிறந்தார். இவர், தற்போது நகரில் உள்ள சீயோன் மேல்நிலைப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். காலை 6 மணிக்கு 2 கி.மீ. நடந்து வந்து பள்ளியில் பணிபுரிந்து விட்டு, மீண்டும் அவர் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு திரும்புகிறார்.

107 வயதிலும் அவர் இளைஞர் போல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். திடகாத்திரமாக பணியாற்றும் அவரை கண்டு பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘1912-ம் ஆண்டு பிறந்த எனக்கு தற்போது 107 வயதாகிறது. எனக்கு 7 மகள்களும், 7 மகன்களும், 38 பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். 14 கொள்ளு பேரப்பிள்ளைகள் உள்ளனர். சிறுவயது முதலே அதிகாலை 5 மணிக்கு எழுந்து ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்வேன். இதுவரை எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது இல்லை. மருந்து, மாத்திரைகள் அதிகமாக உட்கொண்டதில்லை. அண்ணா நகரில் உள்ள மகள் வீட்டில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு தான் பணிபுரியும் பள்ளிக்கு சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து செல்வேன். பின்னர் வேலை முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு நடந்தே வருவேன்’ என்றார்.

இதுகுறித்து பள்ளி தாளாளர் டாக்டர் குரியன் ஆபிரகாம் கூறுகையில் ‘கடந்த பல ஆண்டுகளாக இந்த பள்ளியில் அவர் பணிபுரிந்து வருகிறார். உடல் ஆரோக்கியத்துடனும், கேட்கும் திறன் மற்றும் பார்வைத்திறன் குறையாமல் இருந்து வருகிறார். இவருக்கு 100-வது பிறந்த நாளில் பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பெரும்பாலும் அவர் விடுமுறை எடுத்ததே இல்லை என்பதும் ஆச்சரியப் படத்தக்கது’ என்றார்.

Next Story