முதல்–அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலை இல்லை என்ற நிலை மாறும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை


முதல்–அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலை இல்லை என்ற நிலை மாறும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை
x
தினத்தந்தி 15 Sep 2019 10:15 PM GMT (Updated: 15 Sep 2019 2:29 PM GMT)

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் தமிழகத்தில் இனி வேலை இல்லை என்ற நிலை மாறி படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை சார்பில் சிவகாசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இந்துநாடார் விக்டோரியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 16 ஆயிரம் காலி இடங்கள் இருந்த நிலையில் இந்த முகாமில் 2512 பேர் கலந்து கொண்டனர். இதில் 110 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 632 பேரை தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு உரிய ஆணை வழங்கப்பட்டது.

முகாமில் மதுரை தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் ராமநாதன் வரவேற்று பேசினார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:–

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அரசு வேலை தான் செய்வேன் என்று இல்லாமல் தனியார் நிறுவனங்களில் வேலை தேடும் உங்கள் எண்ணங்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அரசு மற்றும் தனியார் நிறுவனம் எதுவாக இருந்தாலும் உங்கள் உழைப்பு தான் உங்களை உயர்த்தும். தற்போது பல தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை மாற வேண்டும் என்று ஜெயலலிதா உறுதியாக இருந்தார். அவரது கனவை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவாக்கி வருகிறார். படித்த இளைஞர்கள் அனைவருக்கும் உரிய வேலை வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தி தரும். அதற்காகத்தான் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரவு, பகலாக உழைத்து வருகிறார்.

 கடந்த வாரம் கூட முதல்–அமைச்சர் தலைமையில் அமைச்சர் குழு லண்டன், துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் அதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இனி வரும் காலத்தில் தமிழகத்தில் பல புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். அதற்கான பணிகளை முதல்–அமைச்சர் தீவிரமாக எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன், தாசில்தார் ரங்காநாதன், அ.தி.மு.க. பிரமுகர்கள் வக்கீல் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், பலராம், கருப்பசாமி, நகர செயலாளர்கள் அசன்பதுருதீன், பொன்சக்திவேல், வக்கீல் நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலவலர் நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story