உடுமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்


உடுமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 4:15 PM GMT)

உடுமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது.

தளி,

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியை வாழ்விடமாகக் கொண்டு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, சிங்கவால்குரங்கு, அணில், மலைப்பாம்பு, ஓணான் மற்றும் அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. இதில் கருஞ்சிறுத்தையும் அடங்கும். இது மாமிச உண்ணி வகையை சேர்ந்தது ஆகும். குட்டி போட்டு பால்கொடுக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. உடல் முழுவதும் கருமை நிறத்தில் இருக்கும். ஆனால் கண்கள் மட்டும் தங்கம் போல் ஜொலிக்கும். கண்களைக்கொண்டுதான் கருஞ்சிறுத்தையை அடையாளம் காணமுடியும். இதன் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அரிதான வனவிலங்காக கருதப்படுகிறது.

அவ்வளவு எளிதில் யார் கண்களுக்கும் தென்படாது. இதனால் திரைப்படங்கள் அல்லது வனஉயிரியல் பூங்காவில் மட்டுமே கருஞ்சிறுத்தையை காணமுடியும். அடர்ந்த வனத்தின் உயரமான பகுதிகளை தேர்ந்தெடுத்து வசிக்கும் தன்மையுடையது. எந்த சூழலிலும் அந்தப்பகுதியில் இருந்து கீழே வராது. தாவர உண்ணிகளைக் கொன்று தனது உணவுத்தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. ஆனாலும் வறட்சி காலங்களில் ஏற்படுகின்ற தண்ணீர் மற்றும் உணவுப்பற்றாக்குறை காரணமாக பெரிய அளவில் இனப்பெருக்கம் அடையவில்லை.

உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேல்குருமலை, கோணலாறு உள்ளிட்ட பகுதிகளில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் பரவலாக உள்ளது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் நிலவிய வறட்சியின் காரணமாக யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வந்தன.

இதையடுத்து வனவிலங்குகள் உணவை தேடிக்கொண்டு கேரளா வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த வண்ணம் இருந்தன. இதனால் தமிழக வனப்பகுதியில் தாவர உண்ணிகளின் நடமாட்டம் குறைந்து விட்டதால் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக தவித்து வந்தன. மேலும் மாமிச உண்ணிகள் எல்லையை வரையறை செய்து வாழும் தன்மையுடையது என்பதால் அவற்றால் இடம்பெயரவும் முடியவில்லை. இதனால் வனப்பகுதியில் நடமாட முடியாமல் முடங்கிக்கிடந்தன.

இந்த சூழலில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. அதைத்தொடர்ந்து ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதியும், பசுமைக்கு திரும்பிவிட்டது. இதையடுத்து உணவிற்காக அண்டை மாநிலத்திற்கு இடம் பெயர்ந்த யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட தாவர உண்ணிகள் தமிழக வனப்பகுதிக்கு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகளின் உணவுத்தேவையும் பூர்த்தி அடைந்து வருகிறது.

அத்துடன் மாமிச உண்ணிகளும் இறையைத் தேடி வனப்பகுதிக்குள் உலா வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் உடுமலை வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது.

உணவுத்தேவையை நிறைவு செய்த பின்பாக ஆறுகளில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றவாறு உள்ளது. அதை மலையேற்ற பயிற்சிக்கு செல்கின்ற வனஆர்வலர்கள், மலைவாழ்மக்கள் மற்றும் வனத்துறையினர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Next Story