திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை


திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 6:45 PM GMT)

திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்க போலீசார் வர தாமதமானதால் பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சுலைமான்(வயது 45). இவர் பீமநகர் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் சுலைமான் திருச்சி பாலக்கரை ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த திருச்சி-பாலக்காடு ரெயில் முன் அவர் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் ரெயில் தண்டவாளத்தில் கிடந்தது. இது பற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வர தாமதமானது. நீண்டநேரமாக உடல் மீட்கப்படாமல் தண்டவாளத்திலேயே கிடந்ததை கண்ட பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

அப்போது ஈரோட்டில் இருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரெயிலை பொதுமக்கள் மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ரெயில்வே போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து சுலைமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில், சுலைமான் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அவர் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

Next Story