தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பால் மணல் பரப்பை நீர் சூழ்ந்தது


தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பால் மணல் பரப்பை நீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 15 Sep 2019 10:45 PM GMT (Updated: 15 Sep 2019 7:20 PM GMT)

தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பால் அரிச்சல்முனையில் கடற்கரை மணல் பரப்பை கடல்நீர் சூழந்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று காலை முதலே கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டது. குறிப்பாக மதியம் 3 மணிக்கு பிறகு தனுஷ்கோடி கடைகோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரையில் தென் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததுடன், கடல் நீர் அங்கிருக்கும் மணல் பரப்பை சூழ்ந்தது. மாலையில் தென்கடலும், வடக்கு கடலும் கடல் கொந்தளிப்பால் ஒன்று சேர்ந்து காட்சியளித்தது.

இதேபோல் அங்கு கடலோர போலீசார் பாதுகாப்பிற்காக தற்காலிமாக போடப்பட்டுள்ள கூடாரம் உள்ள பகுதியிலும் கடல்நீர் சூழ்ந்தது. இதனால் கடல்நீரில் நின்ற படி தான் பட்டாலியன் போலீசார், சுற்றுலா பயணிகளை கடலில் நீண்ட தூரம் வரையிலும் இறங்கவிடாமல் எச்சரிக்கை செய்தனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடற்கரை மணல் பரப்பு முழுவதும் தெரியாத அளவிற்கு கடல் நீர் சூழ்ந்திருந்ததை நேற்று காணமுடிந்தது. இதனை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். மேலும் கடலில் இறங்கி நின்றபடி செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

இது ஒருபுறம் இருக்க ராமேசுவரம் துறைமுக பகுதியில் கடந்த 2 நாட்களாகவே கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டு வருகிறது.

நேற்று காலையிலும் கடல் நீர் உள்வாங்கியே காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு உள்வாங்கி காணப்பட்ட பகுதி முழுவதும் கடல் நீர் சூழ்ந்து சகஜ நிலையில் காட்சியளித்தது. கடல் கொந்தளிப்பு, உள்வாங்கியது உள்ளிட்டவை வழக்கமான நிகழ்வு என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story