காவிரி குடிநீர் குழாயில் இருந்து பாப்பக்காப்பட்டிக்கு இணைப்பு வழங்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்


காவிரி குடிநீர் குழாயில் இருந்து பாப்பக்காப்பட்டிக்கு இணைப்பு வழங்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 7:10 PM GMT)

காவிரி குடிநீர் குழாயில் இருந்து பாப்பக்காப்பட்டிக்கு இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து குப்பாச்சிப்பட்டி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே சிவாயம் ஊராட்சியில் உள்ள குப்பாச்சிப்பட்டியில் மணப்பாறை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீர் ஏற்று நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் இருந்து குப்பாச்சிபட்டி, கீழகோவில்பட்டி, மேலகோவில்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது காவிரி நீர் ஏற்று நிலையத்தில் இருந்து குப்பாச்சிபட்டிக்கு வரும் காவிரி குடிநீர் குழாயில் இருந்து பாப்பக்காப்பட்டி பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்க ரூ.10½ லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகத்தினரும் காவிரி குடிநீர் வடிகால் வாரியத்தினரும் பணி செய்து வருகின்றனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் பாப்பக்காப்பட்டிக்கு எங்கள் பகுதிக்கு வரும் காவிரி குடிநீர் குழாயில் இணைப்பு கொடுத்தால், தங்கள் பகுதிக்கு வரும் காவிரி குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே எங்கள் கிராமத்துக்கு வரும் குடிநீர் குழாயில் பாப்பக்காப்பட்டி கிராமத்துக்கு இணைப்பு கொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து குப்பாச்சிப்பட்டி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் காவிரி குடிநீரேற்று நிலையம் முன் சாலை மறியல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா, மணப்பாறை காவிரி குடிநீர் உதவி செயற்பொறியாளர் ரவி, கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஒன்றிய பொறியாளர் அன்சாரி, சிவாயம் ஊராட்சி செயலாளர் அருள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குப்பாச்சிப்பட்டி பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் இருந்து பாப்பக்காப்பட்டிக்கு சோதனை குடிநீர் ஓட்டத்திற்கு தான் இணைப்பு கொடுக்கப்படுகிறது. இதனால் குப்பாச்சிப்பட்டிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் பாப்பக்காப்பட்டி குடிநீர் இணைப்பு உடனே மாற்றபட்டு நீரேற்று நிலையத்தின் வேறு இடத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட குப்பாச்சிப்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story