மழைநீர் சேகரிப்பு குறித்து துண்டு பிரசுரம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


மழைநீர் சேகரிப்பு குறித்து துண்டு பிரசுரம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 16 Sep 2019 7:21 PM GMT)

மழைநீர் சேகரிப்பு அமைப்பினை வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் ஏற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்,

கரூரில் மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் பொறியாளர் தினத்தையொட்டி மழைநீர் சேகரிப்பு அமைப்பினை வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் ஏற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சாசன தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாஸ்கர்பாபு, வைரம் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசுகையில், மழைநீர் சேகரிப்பு என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் உயிர்நீர் என்பதை முன்னிலைப்படுத்தி மழைநீர் சேகரிப்பு அமைப்பினை ஒவ்வொரு கட்டிடத்திலும் ஏற்படுத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டு, அதனை தேசிய அளவில் உற்று நோக்க செய்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவார். தற்போது அவரது வழியில் தமிழக அரசானது நீர் மேலாண்மை திட்டம் மூலம் மழைநீரை சேகரிப்பது, மரக்கன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்று ஏற்பாடு செய்தது என்பன போன்ற திட்டங்களை செயல்படுத்தியதோடு மக்களுக்கு போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. ஆறுகளில் செல்லும் மழைநீரானது கடலில் கலப்பது என்பது இயற்கையின் நியதி. ஆனால் இதனை தவறான கண்ணோட்டத்துடன் கூறுவது ஏற்புடையதல்ல. கரூரில் மாயனூர் கதவணையுடன் சேர்ந்து, மேலும் 3 தடுப்பணைகள் அமைக்கப்படுவதன் மூலம் 5 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க இயலும். எனவே மழைநீர் சேகரிப்பினை கட்டிடம் கட்டும் போதே பொறியாளர்கள் அதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மற்றும் பொறியாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மழைநீர் சேகரிப்பினை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தே அமைச்சர் வழங்கினார்.

Next Story