சிவகங்கை அருகே ஜீவ சமாதிக்கு முயற்சித்த சாமியாரின் மகன் உள்பட 3 பேர் கைது


சிவகங்கை அருகே ஜீவ சமாதிக்கு முயற்சித்த சாமியாரின் மகன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2019 11:30 PM GMT (Updated: 16 Sep 2019 8:58 PM GMT)

சிவகங்கை அருகே ஜீவசமாதிக்கு முயற்சித்த சாமியாரின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பந்தல், மின்விளக்கு அலங்காரத்துக்கு ரூ.3 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த பாசாங்கரையைச் சேர்ந்தவர் இருளப்பசாமி (வயது 77). இவருக்கு இருளாயி என்ற மனைவியும், கண்ணாயிரம் என்ற மகனும், பூச்சி என்ற மகளும் உள்ளனர்.

இருளப்பசாமி கடந்த 12-ந் தேதி பாசாங்கரையில் ஜீவசமாதி அடைய போவதாக கூறி அமர்ந்தார். அவர் இருந்த இடத்தின் அருகில் சிவலிங்கமும், நந்தி சிலை ஒன்றும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரிடம் ஏராளமானோர் திரண்டு ஆசி பெற்றனர். சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் உள்பட அதிகாரிகள் பலரும் நீண்ட நேரம் காத்திருந்து இருளப்பசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஜீவசமாதி முடிவை கைவிட கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையே பொதுமக்கள் பலர் காணிக்கையாக இருளப்பசாமியின் குடும்பத்தினரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மேல் இருளப்பசாமி ஜீவசமாதி அடையும் நிகழ்ச்சி கைவிடப்பட்டதாக ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. சாமியார் இருந்த இடத்தில் மின் விளக்கு, பந்தல் அலங்காரம் மற்றும் இருக்கைகள் அமைத்து கொடுத்தது நாட்டரசன் கோட்டையை சேர்ந்த முருகேசன் (50) என்ற ஒப்பந்தகாரர் ஆவார். போலீசில் அவர்தான் இந்த புகாரை கொடுத்துள்ளார்.

புகாரில், “ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய சாமியாரின் மகன் கண்ணாயிரம் மற்றும் கண்ணன், லட்சுமணன், கர்ணன், ஆனந்த் உள்பட சிலர் என்னை சந்தித்து பாசாங்கரையில் மின் விளக்கு, பந்தல் அலங்காரம் மற்றும் இருக்கைகள் அமைத்து கொடுக்கும்படியும், ஜீவசமாதி நிகழ்ச்சி நடந்த பின்னர் அதற்குரிய பணத்தை தருவதாகவும் கூறினர். இதை நம்பி நான் கடந்த 30-ந் தேதி முதல் 13-ந் தேதி அதிகாலை வரை அந்த வசதிகளை செய்து கொடுத்தேன். ஆனால் அவர்கள் பேசியபடி எனக்கு சேர வேண்டிய ரூ.3 லட்சத்தை தராமல் ஏமாற்றி விட்டனர்” என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்குப்பதிவு செய்து சாமியாரின் மகன் கண்ணாயிரம் மற்றும் கண்ணன், ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story