தேர்தல் வேட்பு மனுக்களில் குறைபாடு இருந்தால் தள்ளுபடி செய்யக்கோரி வழக்கு; கூடுதல் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


தேர்தல் வேட்பு மனுக்களில் குறைபாடு இருந்தால் தள்ளுபடி செய்யக்கோரி வழக்கு; கூடுதல் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Sep 2019 10:00 PM GMT (Updated: 16 Sep 2019 9:00 PM GMT)

தேர்தல் வேட்புமனுக்களில் குறைபாடு இருந்தால் தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கில், கூடுதல் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. இந்த வேட்புமனுக்களில் சில வகையான குறைபாடுகள் இருந்தால் பரிசீலனையின்போது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் கூறியுள்ளன.

இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி.க்களில் ஒரு சிலரை தவிர, 36 எம்.பி.க்களின் வேட்பு மனுக்கள் குறைபாடாக உள்ளன. இவற்றை அதிகாரிகள் அப்போதே நிராகரித்து இருக்க வேண்டும். அதாவது இந்த வேட்பாளர்களின் வேட்புமனுவில் பகுதி-அ மற்றும் பிரமாணப்பத்திரத்தில் பகுதி-அ வரிசை எண்(2) மற்றும் பகுதி-ஆ வரிசை எண்(3) ஆகிய 3 இடங்களில் தங்களுக்கு எந்த சட்டமன்ற தொகுதியில் ஓட்டுரிமை உள்ளது என குறிப்பிட வேண்டும். ஆனால் இந்த 36 பேரும் வேட்பு மனுவில் ஒரு பதிலையும், பிரமாண பத்திரத்தில் வேறொரு தகவலையும் கூறியுள்ளனர். இதுபோன்ற வேட்புமனுக் களை பரிசீலிக்கும்போது தேர்தல் அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லை.

இனி வரும் காலங்களில் ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தல் மாண்பை காக்கும் வகையில், சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் குறைபாடுடைய வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் வேட்புமனு பரிசீலனையின்போது 100 சதவீதம் சரியான வேட்புமனுக்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், எந்தெந்த இடங்களில் குறைபாடுகள், தவறுகள் இருந்தால், வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி அட்டவணையாக தேர்தலுக்கு முன்பே அதிகாரிகள் வெளியிட வேண்டும்.

சரியான வேட்பு மனுவை மட்டும் ஏற்றுக்கொள்வது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மனுதாரர் தனது கோரிக்கை குறித்து முழு விவரங்களுடன் கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Next Story