தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி


தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 16 Sep 2019 11:15 PM GMT (Updated: 16 Sep 2019 9:26 PM GMT)

தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது என காரைக்குடியில் அளித்த பேட்டியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

காரைக்குடி,

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நேற்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திட்டத்தை கொண்டு வர அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குழாய் பதிக்கும் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது. சுத்திகரிப்பு நிலைய பணிகளில் 40 சதவீத வேலைகள் நடந்துள்ளன. பாதாள சாக்கடை திட்டத்தினால் சேதமான சாலைகள் போடப்பட்டு வருகின்றன. அதற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். பொதுமக்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. எனவே விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய மோட்டார் வாகன சட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் இருந்து புகாரும், கோரிக்கைகளும் வந்துள்ளன. இது குறித்து முதல்-அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சரும் ஆலோசித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, கலெக்டர் ஜெயகாந்தன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், என்ஜினீயர் ரெங்கராஜூ, தாசில்தார் பாலாஜி, அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன், இளைஞர் அணி செயலாளர் இயல் தாகூர், பாம்கோ நிறுவன இயக்குனர் போஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின் போது அப்பகுதி மக்கள், குப்பைக்கிடங்கினால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் பற்றி அமைச்சர்களிடம் கூறினர். அதற்கு, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு, அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

Next Story