கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஆட்டோக்கள் சேதம்- 2 பேர் படுகாயம்


கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஆட்டோக்கள் சேதம்- 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 1:06 PM GMT)

கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஆட்டோக்கள் சேதம் அடைந்தது. மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூடலூர்,

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதில் கூடலூரில் இருந்து நடுவட்டம் வரையிலான சாலை செங்குத்தான மலைப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் கீழ்நோக்கி வரும்போது, 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் சமவெளியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த விதிகளை முறையாக கையாளுவது இல்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் ஏற்றி கொண்டு கூடலூர் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சியை சேர்ந்த கண்ணுசாமி (வயது 38) என்பவர் ஓட்டினார். ராஜகோபாலபுரம் பகுதியில் வந்தபோது திடீரென டேங்கர் லாரி கட்டுப்பாட்டை தாறுமாறாக ஓடியது.

இந்த லாரி கூடலூர் பழைய பஸ் நிலையத்தின் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் ஆட்டோக்கள் சேதம் அடைந்தது. மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நடுகூடலூரை சேர்ந்த அருள்தாஸ் (வயது 40) மற்றும் சாலையில் நடந்து சென்ற கூடலூரை சேர்ந்த உசேன் (48) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் டேங்கர் லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே டேங்கர் லாரி உரிமையாளர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Next Story