திருமணம் நின்றுபோன விரக்தியில் இளம்பெண் தற்கொலை - முன்னாள் காதலன் கைது


திருமணம் நின்றுபோன விரக்தியில் இளம்பெண் தற்கொலை -  முன்னாள் காதலன் கைது
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 4:20 PM GMT)

எண்ணூரில் திருமணம் நின்றுபோன விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் பெரிய காசிகோவில் குப்பம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுரேகா. சுரேகாவின் சகோதரியான ரஞ்சனி என்பவர் மாமல்லபுரம் அருகே கல்பாக்கத்தில் தனது கணவர் ரமேஷ் உடன் வசித்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சனி உடல்நலம் சரியில்லாமல் இறந்துபோனார். இதனால் அவர்களது மூத்த மகள் பிரீத்தா (வயது 22) மற்றும் அவரது தங்கை ஆகிய 2 பெண் பிள்ளைகளையும் சுரேகா எண்ணூரில் உள்ள தன் வீட்டில் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் பிரீத்தா கல்லூரியில் பி.எஸ்சி. வரை படித்துவிட்டு அடையாறில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது மாமல்லபுரத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்துள்ளார். இதனிடையே சந்தோஷின் பழக்கவழக்கங்கள் சரியில்லை என்று கூறி அவருடனான காதலை பிரீத்தா முறித்துக்கொண்டதாக தெரிகிறது.

இதனால் அவர் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் நின்று விட்டார். ஆனால் காதலன் சந்தோஷ், பிரீத்தாவை தொடர்ந்து காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் சுரேகாவுக்கு தெரியவந்ததால், சந்தோசை சந்தித்து பிரீத்தாவை பின் தொடர வேண்டாம் என்று அறிவுரை கூறி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, எண்ணூரை சேர்ந்த வெற்றி என்பவரை பிரீத்தாவுக்கு திருமணம் பேசி திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரீத் தாவின் முந்தைய காதல் விஷயம் தெரியவந்ததால், மாப்பிள்ளையின் பெற்றோர் திடீரென்று திருமண ஏற்பாடுகளை நிறுத்த சுரேகாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் திருமணம் நின்ற அதிர்ச்சியில் பீரித்தா 2 நாட்களாக மிகவும் சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்கு சென்ற பிரீத்தா நள்ளிரவில் அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரீத்தா தான் கைப்பட எழுதிய கடிதத்தில், தனது சாவுக்கு முன்னாள் காதலன் சந்தோஷ் தான் காரணம் என்று கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணூர் போலீசில் பிரீத்தாவின் உறவினர்கள் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் காதலன் சந்தோசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story