செம்பனார்கோவில் அருகே, சரியாக படிக்காத மாணவியை கத்தியால் கிழித்த ஆசிரியர் கைது


செம்பனார்கோவில் அருகே, சரியாக படிக்காத மாணவியை கத்தியால் கிழித்த ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 17 Sep 2019 10:00 PM GMT (Updated: 17 Sep 2019 6:53 PM GMT)

செம்பனார்கோவில் அருகே சரியாக படிக்காத மாணவியை கத்தியால் கிழித்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொறையாறு,

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கீழையூரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் 8 வயது மகள் பவித்ரா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளி மாணவியான பவித்ரா, சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பாஸ்கர்(45) என்பவர் நேற்று முன்தினம் தனது கையில் இருந்த கத்தியால் சிறுமியின் கையில் தட்டியுள்ளார். அப்போது கத்தி, மாணவியின் கையை கிழித்து விட்டது.

இதில் படுகாயம் அடைந்த மாணவியை அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தார்.

Next Story