போளூரில் போலீசார் பிடிக்க முயன்றபோது மலையில் இருந்து கீழே குதித்த காதல் ஜோடி - பாறையில் விழுந்ததால் படுகாயம்


போளூரில் போலீசார் பிடிக்க முயன்றபோது மலையில் இருந்து கீழே குதித்த காதல் ஜோடி - பாறையில் விழுந்ததால் படுகாயம்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 8:11 PM GMT)

போளூரில் 300 அடி உயரம் உள்ள மலையில் இருந்து காதல் ஜோடி கீழே குதித்ததில் பாறையில் விழுந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

போளூர், 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சந்தபுதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். எண்ணெய் வியாபாரி. இவரது மகன் அருண்குமார் (வயது 19), சோமாசிபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகிறார்.

இதேபோல் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் உள்ளார். திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடியில் 1 வருடத்திற்கு முன் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க அந்த பெண் வந்திருந்தார். அப்போது அருண்குமாரும், அந்த பெண்ணும் சந்தித்து உள்ளனர். பின்னர் அவர்கள் பேசி பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து இருவரும் செல்போனில் பேசிக்கொண்டு காதலை வளர்த்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் பெண்ணுக்கு 16 வயதே ஆவதால் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள் என அருண்குமாருக்கு அவரது நண்பர்கள் அறிவுரை கூறினர். ஆனால் இரு வீட்டாரும் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து போளூருக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

இவர்கள் 900 படிக்கட்டுகள் உள்ள போளூர் சுயம்பு லட்சுமி நரசிம்மசுவாமி மலை மீது ஏறினர். இரவில் அவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். இந்த மலை சுமார் 300 அடி உயரம் கொண்டதாகும். நேற்று காலை மலையை விட்டு கீழே இறங்கி அல்லிநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தனர். அங்கு சாப்பிட்டுவிட்டு மீண்டும் மலைமீது ஏறினர்.

இதனிடையே மலைப் பகுதியில் காதல் ஜோடி ஒன்று நடமாடுவதை கண்டு அப்பகுதி மக்கள் மதியம் 12 மணியளவில் போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சசிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு, ரவி, விநாயகம், ஏட்டுகள் சுதாகர், சரவணன், பாஷ்யம் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்தனர். அவர்களில் சிலர் படிக்கட்டு வழியாகவும், சிலர் பாறைகள் வழியாகவும் மலையில் ஏறினர்.

போலீசார் வருவதை பார்த்ததும் அருண்குமாரும், அவரது காதலியும் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள கீழே குதித்தனர்.

அவர்கள் கீழே உள்ள பாறையில் விழுந்ததால் இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து துடிப்பதை கண்டு அதிர்ச்சியுடன் நின்றனர்.

பின்னர் படுகாயத்துடன் துடித்த இருவரையும் போலீசார் மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story