அதிராம்பட்டினம் அருகே கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டியபோது, பழங்கால நடராஜர் சிலை கண்டெடுப்பு


அதிராம்பட்டினம் அருகே கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டியபோது, பழங்கால நடராஜர் சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 8:52 PM GMT)

அதிராம்பட்டினம் அருகே கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டியபோது பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், ஒரத்தநாடு பொதுப்பணித் துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், தனது சொந்த கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் பின்புறம் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.

இதற்காக பள்ளம் தோண்டியபோது பழங்கால நடராஜர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக தாசில்தார், ஆர்.டி.ஓ. ஆகியோருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம், இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி மகரஜோதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்.

அந்த நடராஜர் சிலை 5 அடி உயரமும் 500 கிலோ எடையும் இருந்தது. இந்த சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அங்கு சிலைகள் இருக்கும் தடயம் தெரிவதால் பொக்லின் எந்திரம் கொண்டு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளம் தோண்டி சிலைகள் உள்ளதா? என ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இதன் அருகில் உள்ள கிராமமான பழஞ்சூர் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அதிராம்பட்டினம் சிவன் கோவில் நிர்வாக அதிகாரி சண்முகம் கூறுகையில், இந்த பகுதியை சுற்றி அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள் கிடைக்கப்பெறுவதாலும், அதிவீரராமபாண்டியன் கோட்டை இப்பகுதியில் இருந்ததாலும் அதிக அளவில் இது போன்ற ஐம்பொன் சிலைகள் கிடைக்கக் கூடும். எனவே இப்பகுதியை அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Next Story