காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல்; ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல்; ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 9:46 PM GMT)

காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு பெரியார்-அண்ணா நினைவகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட இயக்க வரலாற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் அரும்பணி ஆற்றி இருக்கிறார்கள். இதனால் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் வேரூன்றி நிலைத்து நிற்கிறது. அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு பணிகளை தமிழகத்தில் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.

பள்ளிக்கூடங்களில் காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தவறான தகவல் பரவி உள்ளது. இந்த அரசின் சார்பில் அப்படிப்பட்ட அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஏற்கனவே உள்ள நிலையில் தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சார்பில் காந்தி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிக்கூடங்களில் காந்தி ஜெயந்தி விழா நடைபெறும்.

அன்றைய தினம் விழா எடுப்பதை தவிர வேறு எந்த வகுப்பும் கிடையாது. பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப்பாடம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதை தவிர வேறு எந்த நிலைகளிலும் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக 3 ஆண்டு காலத்துக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 3 ஆண்டுகள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்வதற்காக வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதுவரை ஏற்கனவே உள்ள விதிமுறைகள் செயல்படும்.

அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்கும். அதுபற்றி நான் கூற முடியாது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக நேற்று காலையில் கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறுகையில், ‘கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை 94.47 சதவீதம் திரும்ப பெற்ற வரலாறு தமிழ்நாட்டிலேயே ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்குத்தான் உண்டு. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நுழைவுச்சீட்டு ஆன்லைனில் வெளியிடப்படும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும்,’ என்றார்.

இந்த விழாவில் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், வட்டார வளர்ச்சி அதிகாரி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story