அ.தி.மு.க.விற்கு வீழ்ச்சி என்பதே கிடையாது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


அ.தி.மு.க.விற்கு வீழ்ச்சி என்பதே கிடையாது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 10:24 PM GMT)

தமிழ் மக்கள் இருக்கும் வரை அ.தி.மு.க.விற்கு வீழ்ச்சி என்பதே கிடையாது என அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர்,

அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் தகுதி அ.தி.மு.க.விற்கு தான் உண்டு. சென்னை ராபின்சன் பூங்காவில் அண்ணா கொட்டும் மழையில் தி.மு.க.வை தொடங்கிய போது கருணாநிதி அதை இழிவு படுத்தி பேசினார். ஆனால் அதன் பின்பு ஆட்சியை வஞ்சகமாக கைப்பற்றினார். அதன் பின்னர் அது கருணாநிதியின் தி.மு.க.வாகத்தான் இருந்தது. தற்போது ஸ்டாலின் தி.மு.க.வாக உள்ளது. தி.மு.க.வில் வாரிசு அரசியல் தான் இருக்கிறது. கருணாநிதி, ஸ்டாலினை முத்தமிட்டார். ஸ்டாலின் தற்போது உதயநிதி ஸ்டாலினை முத்தமிட்டுள்ளார். அடுத்து உதயநிதி ஸ்டாலின் அவரது மகனை முத்தமிடுவார். இதுதான் தி.மு.க.வின் நிலை. ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் ஏழை தொண்டனும் கோட்டையில் உட்கார வாய்ப்பு கிடைக்கும். இன்று இல்லாவிட்டாலும் நாளை பதவி கிடைக்கும். ஆனால் எந்த அ.தி.மு.க. தொண்டனும் பதவியை எதிர்பார்த்து இல்லை. கட்சிக்காக உழைப்பவன் கட்சி தொண்டு ஆற்றுபவன். மக்களுக்காக உழைப்பவன்.

அ.தி.மு.க. வுக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை. என்றுமே வளர்ச்சி தான். கருணாநிதி 46 ஆண்டு காலமாக அ.தி.மு.க. வை வீழ்த்த நினைத்தார் அது முடியவில்லை. தற்போது ஸ்டாலின் அ.தி.மு.க.வை ஒழித்து விடுவேன் என்கிறார். ஆனால் அவரால் ஒன்றும் செய்து விட முடியாது. அ.தி.மு.க. இருக்கும் வரை தமிழக மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். தமிழ் மக்கள் இருக்கும் வரை அ.தி.மு.க.விற்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழ் மக்களுக்கும் அ.தி.மு.க. பாதுகாப்பாக இருக்கும். தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.

வரவிருக்கின்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க. தான் வெற்றி பெரும். நாங்குநேரி தொகுதியில் நான் பொறுப்பாளராக வேலை பார்க்க உள்ளேன். அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெரும். உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெறுவோம்.

ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்றார். தனது சொந்த காரியங்களுக்காக சென்றார். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மேம்பாட்டிற்காகவும் தமிழக மக்களுக்காகவும் சென்று வந்துள்ளார். அ.தி.மு.க. திராவிட இயக்கத்தில் பூத்த ஆன்மிக மலர். விருதுநகர் மாவட்டத்தில் வீரசோழன் முதல் தேவதானம் வரை அனைத்து கிராமங்களுக்கு சென்றாலும் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டன் இருப்பான். ஆனால் தி.மு.க. தொண்டன் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் இருப்பான். இவ்வாறு அவர் பேசினார்.

ராஜவர்மன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். அணி செயலாளர் மூக்கையா, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், நகர செயலாளர் முகமது நைனார், மச்சராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story