போலீஸ் நிலையம் அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் கொள்ளை


போலீஸ் நிலையம் அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 10:33 PM GMT)

விருதுநகரில் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2¾ லட்சம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த வெள்ளத்துரை பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பெருமாள்சாமி ஆகியோருக்கு சொந்தமான இந்த நிதி நிறுவனத்தில் செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த சக்திவேல்(வயது 29) என்பவர் காசாளராக பணியாற்றி வருகிறார்.

இவரை தவிர மேலும் 6 பேர் அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த நிதி நிறுவனத்தின் மூலம் வாகனம் மற்றும் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்தை அலுவலகத்தில் வைத்து விட்டு காசாளர் சக்திவேல் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டி சென்று விட்டனர். நேற்று காலை அலுவலகத்திற்கு வந்த போது அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்தில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மேலும் அந்த அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா அதன் இணைப்பு ஒயர்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் நிலையம் அருகிலேயே உள்ள நிதி நிறுவனத்தில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அந்த வணிக வளாகத்தை ஒட்டி நெருக்கமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

இரவில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story