வேளாங்கண்ணி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - ஆட்டோ டிரைவர் பலி:2 பேர் படுகாயம்


வேளாங்கண்ணி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - ஆட்டோ டிரைவர் பலி:2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Sep 2019 9:30 PM GMT (Updated: 18 Sep 2019 1:36 PM GMT)

வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங் கண்ணி பூக்கார தெருவை சேர்ந்தவர் சேவியர். இவருடைய மகன் சதீஸ் (வயது 38). ஆட்டோ டிரைவர். குறிச்சி பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் ரஞ்சித்குமார். இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சதீஸ் ஓட்டி சென்றார். அப்போது செருதூர் பாலம் அருகே சென்ற போது எதிரே வேளாங்கண்ணி முஸ்லிம் தெருவை சேர்ந்த சாதம் உசேன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சதீஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதில் சதாம் உசேன், சதீஸ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சதீசை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மருத்துவமனையில் ரஞ்சித்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். சதாம் உசேனை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story