பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி; நேர்முக தேர்வுக்கு வந்த போது பரிதாபம்


பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி; நேர்முக தேர்வுக்கு வந்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:15 PM GMT (Updated: 18 Sep 2019 5:38 PM GMT)

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வந்தபோது 2 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர்,

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பெருமுடிச்சு பகுதியை சேர்ந்தவர் விக்டர். இவரது மகன் அவினாஷ் (வயது 21).இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவினாஷ் திருவள்ளூரை அடுத்த மண்ணூர் கூட்டு சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்முக தேர்வுக்காக அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான விவேகானந்தன் (21), கவுதம் (23) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அவர்கள் பேரம்பாக்கம் அருகேயுள்ள கொண்டஞ்சேரி சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்தது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வந்த பொதுமக்கள் காயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவினாஷ் பரிதாபமாக இறந்து போனார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விவேகானந்தன் சிகிச்சை பலனில்லாமல் நேற்று பரிதாபமாக இறந்து போனார். கவுதம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story