பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கழிவறையில் வீசி சென்ற தாய்


பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கழிவறையில் வீசி சென்ற தாய்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 5:43 PM GMT)

கல்லக்குடியில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கழிவறையில் தாய் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் திருச்சி-சிதம்பரம் சாலையோரத்தில் கே.கே.நகர் உள்ளது. நேற்று அதிகாலை இங்குள்ள பொது கழிவறைக்கு அப் பகுதி பொதுமக்கள் காலைக்கடன்களை கழிப்பதற்காக சென்றனர்.

அப்போது, கழிவறையின் ஒரு பகுதியில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சத்தம் வந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு கிடந்தது.

போலீசார் விசாரணை

உடனே இதுபற்றி கல்லக்குடி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அத்துடன் ‘திருச்சி சைல்டு லைன்’ உறுப்பினர்கள் முரளி, கல்பனா மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து, அந்த குழந்தை யாருடையது? குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story