சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்; 9 பேர் கைது


சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்; 9 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sep 2019 11:45 PM GMT (Updated: 18 Sep 2019 7:08 PM GMT)

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று பயங்கர ஆயுதங்களுடன் 2 கோஷ்டிகளாக கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘ரூட் தல’ தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் சில மாணவர்கள் பட்டாகத்தியுடன் பஸ்சில் பயணம் செய்த, வேறு சில மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ‘ரூட் தல’ மாணவர்களின் அடாவடி செயல்களை தடுத்து நிறுத்த, போலீஸ் உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து ‘ரூட் தல’ மாணவர்கள் அனைவரையும் போலீசார் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணைக்கு பின் மாணவர்கள் அனைவரும், ‘இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் இனி ஈடுபட மாட்டோம்’ என உறுதிமொழி எடுத்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு மாணவர்களிடையே அமைதி நிலவிய நிலையில், நேற்று திடீரென பூகம்பம் வெடித்தது. நேற்று மாலை சென்னை ராஜாஜி சாலை, கலெக்டர் அலுவலகம் அருகில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற மாணவர்கள் கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கு சுற்றித்திரிந்த மாணவர்களை கண்ட, அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த எழும்பூர் ரெயில்வே போலீசார் கடற்கரை ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 9 மாணவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோதலில் ஈடுபட்டவர்கள், மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் ஒரு கோஷ்டி, தங்களுக்குள் வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கி அதில், மற்றொரு கோஷ்டி மாணவர்களை தாக்குவதற்காக தகவலை பரிமாறிக் கொண்டது தெரியவந்தது. இதில் 2 கோஷ்டி மாணவர்களிடையே இருந்த முன்விரோதம், நேற்று பொது இடத்தில் மோதலாக வெடித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக, அந்த 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்களிடையே போலீசார், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடக்கூடாது என அவ்வபோது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் மாணவர்கள் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. போலீசாரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு முறையும் அறிவுரை கூறி அனுப்புவதை தங்களுக்கு சாதகமாக கொண்டு மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story