வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்த 2 பேர் கைது


வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 10:25 PM GMT)

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் ஊருக்கு மேற்கில் மலை அடிவார பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் சுப்பிரமணியன் தலைமையில் வனவர் குருசாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட வனத்துறையினர் அங்கு அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, சுந்தரராஜபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 38) மற்றும் சிவராமகிருஷ்ணன் (21) என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்த பையை சோதித்து பார்த்த போது, 2 அரிவாள்கள் மற்றும் தையல் எந்திரத்தில் பயன்படுத்தும் நூல் கண்டு இருந்தன. விசாரணையில் அவர்கள் இருவரும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, விலங்குகள் வரும் பாதையில் நாட்டு வெடி குண்டுகளை புதைத்து வைத்து விட்டு காத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்கள் புதைத்து வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள், வேட்டையாட பயன்படுத்திய அரிவாள்கள், செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர், அவர்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Next Story