ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 9:20 PM GMT)

ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ரெட்டியார்சத்திரம்,

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள பலக்கனூத்து, புதுச்சத்திரம், காமாட்சிபுரம், கொத்தப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் நீலமலைக்கோட்டை பகுதி சோத்தாளநாயக்கன்கோம்பை ஓடையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட கிணறுகளில் இருந்து பைப்லைன் அமைத்து பலக்கனூத்து, புதுச்சத்திரம், காமாட்சிபுரம், கொத்தப்பள்ளி ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வடமதுரை

அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆறு, ஓடைகளில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று வடமதுரை 3 சாலை சந்திப்பு அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் செம்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாநிலக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட துணை செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆறு, ஓடைகளில் மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். 

Next Story