லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் சாவு - மேலும் 2 பேர் படுகாயம்


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் சாவு - மேலும் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:00 PM GMT (Updated: 18 Sep 2019 9:43 PM GMT)

குமாரபாளையம் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

குமாரபாளையம், 

குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் புதுச்சான்காடு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் பிரதீப்குமார் (வயது 19). குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்து வந்தார்.

இதே கல்லூரியில் குமாரபாளையம் பாதரை சவுதாபுரத்தை சேர்ந்த சிவம் மகன் மோகன்குமார் (19), ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் நகலூரை சேர்ந்த மாணிக்கம் மகன் அரிபிரசாத் (19) ஆகியோரும் படித்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து குமாரபாளையம் வந்து விட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பினர். பிரதீப்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். மற்ற இருவரும் பின்னால் உட்கார்ந்து இருந்தனர்.

வழியில் வட்டமலை எதிர்மேடு பகுதியில் வந்தபோது முன்னால் சிமெண்டு பாரம் ஏற்றிச்சென்ற லாரியின் பின்பகுதியில் இவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பிரதீப்குமார் இறந்தார்.

படுகாயமடைந்த மற்ற இருவரும் ஈரோட்டில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story