தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் தகவல்


தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2019 11:00 PM GMT (Updated: 19 Sep 2019 5:32 PM GMT)

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் ராஜூ கூறினார்.

திருச்சி,

நான்காம் தலைமுறை அலைவரிசை எனப்படும் 4 ஜி சேவை தொடக்க விழா நேற்று திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு திருச்சி சிவா எம்.பி. தலைமை தாங்கி திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார். பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் வி.ராஜூ முன்னிலை வகித்தார்.

4 ஜி சேவை தொடங்கப்பட்டதை தொடர்ந்து சிவா எம்.பி.யும், தலைமை பொது மேலாளர் ராஜூவும் மேடையில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் பேசினர்.

விழாவில் தலைமை பொது மேலாளர் ராஜூ பேசியதாவது:-

திருச்சி மாநகர பகுதி முழுவதும் இந்த சேவை 117 டவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. விரைவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் இந்த சேவை வழங்கப்படும். திருச்சி மாநகர பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அவர்களின் சிம்கார்டுகளை இலவசமாக 4 ஜி சிம்கார்டாக மாற்றம் செய்ய திருச்சி கண்டோன்மெண்ட், மெயின்கார்டு கேட், பெல், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களில் தங்களின் செல்போனுடன் வந்து ஆதார் நகல் கொடுத்து சிம்கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

கிராமப்புறங்களில்...

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4 ஜி சேவையை ஏற்கனவே கோவை, சேலம், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் தொடங்கி உள்ளது. அந்த நகரங்களில் தனியார் நிறுவனங்களில் 4 ஜி இணைப்பு பெற்றிருந்த வாடிக்கையாளர்களில் பலர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறி உள்ளனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4 ஜி சேவை 20 முதல் 30 எம்.பி.பி.எஸ். அளவிற்கு அதிவேகமாக உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் உணர்ந்து உள்ளனர். திருச்சியை தொடர்ந்து தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 4 ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் பொது மேலாளர்கள் வினோத், ஜெகதீசன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் பாபுராஜ் வரவேற்றார். முடிவில் பொது மேலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

Next Story