திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல்


திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Sep 2019 11:00 PM GMT (Updated: 20 Sep 2019 5:32 PM GMT)

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டானில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்குரிய கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

பின்னர் கல்லூரி முன்பு நாகை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் தஞ்சை-நாகை சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story