அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 5 பேர் கைது; 4 லாரிகள் பறிமுதல்


அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 5 பேர் கைது; 4 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Sep 2019 10:30 PM GMT (Updated: 20 Sep 2019 5:41 PM GMT)

கொட்டாம்பட்டி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொட்டாம்பட்டி,

திருச்சி, மணப்பாறை, விராலிமலை, கரூர், குளித்தலை பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது. இதில் அதிகமான லாரிகள் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆர்.டி.ஓ. கண்ணகி தலைமையில் கொட்டாம்பட்டி வருவாய் ஆய்வாளர் முருகானந்தம், கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கொட்டாம்பட்டி அருகே உள்ள திருச்சுனை விலக்கு மதுரை-திருச்சி நான்கு வழி சாலையில் சோதனை நடத்தியபோது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த 4 டிப்பர் லாரிகளை மறித்து சோதனை செய்தனர்.இதில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிலைமானை சேர்ந்த கருப்பசாமி (வயது52), திருப்புவனம் முனியாண்டி (43), சக்குடி கார்த்திக் (30), நரசிங்கம் பகுதியை சேர்ந்த மருதுமாலை (36), அட்டப்பட்டியை சேர்ந்த அஜ்மீர் (37) ஆகிய 5 பேரை பிடித்து அதிகாரிகள் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story